நேற்று இரவிலிருந்து நுட்ப வலைப்பதிவுகளில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் ஆரக்கிள் செய்த புண்ணியம். வேறொரு விசியத்தில் கூகுளிடம் பட்ட அடிக்கு பதிலாக, ஆண்ட்ராய்டுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்து கூகுளைப் பணியவைக்கப் பார்க்கிறது.
தன் வசம் உள்ள ஜாவா காப்புரிமைகளை வேண்டும் என்றே பலமுறை மீறி வந்துள்ளதாகவும், அதற்கான தகுந்த பதிலையும் மேற்கொண்டு அதுபோன்ற காரியங்களைத் தொடரக்கூடாது என்றும் ஆரக்கிள் வழக்கைத் தொடர்ந்து சிலிகான் வேலியில் தீயைக் கொழுத்திப் போட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு செயலிகள் கட்டமைப்பும் பயன்பாடுகளும் அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில் பெரிய முதலைகளுக்கிடையேயான இந்த மோதல் முக்கியமானதாகப் படுகிறது. ஜாவாவிற்கு என பல காப்புரிமைகளை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் வைத்திருந்தது. அதோடு சுதந்திர செயலிகள் கட்டமைப்பிற்கு ஆதரவாகவும் நடந்து கொண்டது. ஜாவாவின் மூலம் பணம் செய்யவில்லை என்ற விமர்சனம் கூட சன் மைக்ரோ மீது இருந்தது. இவ்வளவு ஏன். ஜாவா வாழும். சன் மைக்ரோ அல்ல என்று விளையாட்டாகக் கூறுவார்கள்.
கருவிகளுக்கான மென்பொருள் பயன்பாட்டில் தொடங்கி, இயங்குதளம் அனைத்திலும் இயங்கும் வண்ணம் செயலிகள் செய்ததால் ஜாவாவின் பயன்பாடு அதிகரித்தது. இன்று கருவிகள், கணினியில் ஓடும் செயலிகள், இணையப் பயன்பாட்டுக்கான சேவிகள்.. சாதாரண பதிப்பு, எண்டர்பிரைஸ் பதிப்பு கருவிகளுக்கான பதிப்பு என்று ஜாவாவின் சந்தைப் பங்களிப்பு இன்றியமையாததாக மாறிய நிலையில் ஆரக்கிள் வசம் கை மாறியது. (ஆரக்கிள் அப்போது வெப்லாஜிக், சன்மைக்ரோ, மைசீகொல் என்று அனைத்தையும் வாங்கிக் குவித்தது நினைவிருக்கலாம்)
ஆண்ட்ராய்டு சமீப காலமாக சந்தையை சூடு பிடிக்க வைத்துள்ளது. அதோடு பெரிய மொபைல் போன் கருவி செய்யும் HTC, மோட்டரோலா போன்றவர்களுடன் இணைந்து ஒரு தர நிர்ணய அமைப்பினை உருவாக்கி ஒருங்கிணைக்கிறது அண்ட்ராய்டு. விளைவு சந்தையில் குறிப்பிட்ட அளவை ஆண்ட்ராய்டு கவ்வியது. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் 5 ஸ்மார்ட் போன்களில் ஒன்று ஆண்ட்ராய்டாக இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். அதோடு ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளங்களில் பிளாக்பெரிக்கு அடுத்தபடியாக இப்பவே இடம் பிடித்துள்ளது.
ஜாவாவை கம்ப்பைல் செய்ய தல்விக் (dalwik) என்கிற விர்ச்சுவல் மெசினை கூகுள் பயன்படுத்துகிறது. தல்விக்-ஐ ஜாவாவின் ‘clean room’ கட்டமைப்பு என்று சொல்லும் கூகுளின் வாதத்தை மறுத்து தல்விக்கில் தங்களது காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று ஆரக்கிள் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தங்கள் காப்புரிமையை மீறுவதாக நிறுவனங்கள் போர்க்கொடி தூக்குகின்றன. மைக்ரோசாப்ட்.. இப்போது ஆரக்கிள். ஆரக்கிளின் நோக்கம் கூகுளுக்கு சூடு போடுவது மட்டுமன்றி ஆண்ட்ராய்டுக்கு முட்டுக்கட்டை போடுவதும்தான். அத்தோடு ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுளின் வெற்றி இவர்களை கலங்க வைத்துள்ளது, இது தொடர்ந்தால் ஜாவாவிற்குப் போட்டியாக தல்விக் மாறலாம்!!
திறந்த நிரல் எழுதுபவர்கள் (GNU மற்றும் NON GNU) இணையத்தை மேம்படுத்தி அதை வாழ்விற்கு உதவும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். கூகுள் மீதும் திறந்த நிரல் சமுதாயத்தின் மீதும் அந்த அடிப்படையற்ற வழக்கைத் தொடர்ந்துள்ளது என்று கூகுள் கருத்து தெரிவித்தள்ளது.
எல்லாவற்றையும் விட கூகுளின் சிஈஓ எரிக் ஸ்கிமிட் ஒரு ஜாவா ஆசாமி. சன் மைக்ரோசில் ஜாவா கட்டமைப்பு அணியை நடத்திவந்த அவர் 2001ல் கூகுளில் இணைந்தார். ஜாவாவின் பயன்பாடுகள் பற்றி மற்றவர்களை விட அதிகம் அறிந்தவர் என்பது சுவையான செய்தி.
ஆண்ட்ராய்டுக்கு ஜாவா முக்கியம். எனவே இந்த வழக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. என்ன வருகிறதென்று பார்க்கலாம்.






